அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் – வேலூர் ஆட்சியர்

வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதிமுக உட்பட 28 பேர் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7 லட்சத்து ஆயிரத்து 350 பேரும், பெண்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 105 பேரும் உள்ளனர்

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி மொத்தம், 3 ஆயிரத்து 752 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபேட் ஆயிரத்து 896 இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 600 துணை ராணுவத்தினர் உட்பட, 6 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பூத் சிலிப் இல்லாவிட்டாலும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில், ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என கூறினார்.

 

Exit mobile version