திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 18-ம் தேதி வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா 18ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை ஒரு மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.

இரவு தங்க சப்பரத்தில் சுவாமி கிரிவீதி உலா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழாவையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து பாத யாத்திரையாக வருவார்கள். திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்பட உள்ளன. அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version