ஆமைபோல் தொடரும் மேம்பாலப்பணி..கோவையை புறக்கணிக்கும் விடியா திமுகஅரசு!

அரசியல் காழ்ப்புணர்ச்சினா என்னன்னே தெரியாது என்று பம்மாத்து காட்டும் விடியா திமுக அரசு, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே கோவையில் மேம்பாலப் பணியினை ஆமை வேகத்தில் நடத்துவதால், அதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அல்லல்படுவது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, காந்திபுரம், கவுண்டம்பாளையம், சக்திசாலை, திருச்சி சுங்கம் சாலை, மற்றும் காந்திபுரம் நூறு அடி சாலை, ராமகிருஷ்ணா சாலை உட்பட பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் கோவை அவினாசி சாலை, உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.

உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே 2 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ல் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக் கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு 216 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பாலத்துக்காக 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் விடியா திமுக ஆட்சியில் இந்த பாலம் கட்டுமானப் பணி என்பது ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருவதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும் இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதே போல பாலம் கட்டுமானப் பணிக்காக நிலத்தை கையகப்படுத்திய விடியா அரசு அதற்கான இழப்பீட்டை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துக்கின்றனர் குடியிருப்போர்..

நிலம் கையகப்படுத்துவதில் அரசு மெத்தனம் காட்டுவதாலும், நில உரிமையாளர்களுக்கு பணத்தை வழங்க காலதாமதம் செய்வதாலும் கடந்த ஆண்டே நிறைவுபெற வேண்டிய மேம்பாலப்பணிகள் இன்று வரை முடிவடையாமல் இழுத்தடிக்கப்படுவது கோவை மாவட்டத்தை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

Exit mobile version