தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள்,வணிக நிறுவனங்கள் திறப்பு

தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களைத் திறந்து வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் விடுமுறை குறித்த விவரங்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், ஊதியத்தை பணியாளர்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும், கூடுதல் நேரம் பணியாற்றும் ஊழியர்கள் பத்தரை மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விதிமுறைகளை மீறி அதிக நேரம் பணியாற்ற நிர்பந்திக்கும் நிறுவனங்களின் மீது சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் இரவு 8 மணி வரை மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரப்பணியில் பெண்களை வேலைக்கு அமர்த்தினால் அவர்களிடம் எழுத்துப் பூர்வமான சம்மதம் வாங்க வேண்டும்

இரவில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன், அவர்களின் பாதுகாப்பு, கண்ணியம், மரியாதையை உறுதி செய்யும் வகையில் போதிய ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

பெண்கள் பணியாற்றும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், பாலியல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு தனியாக குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் பணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version