குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!

குரூப் 4 தேர்வானது நடத்தப்பட்டடு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகப் போகிறது. கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் தேர்வு முடிவுகள் இவ்வாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையானது அதிரகரிக்கப்பட வேண்டும் என்று தேர்வர்கள் தொடர்ந்து பல கோரிக்கைகளை வைத்த வண்ணம் இருந்தனர்.

நேற்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் குரூப் 4-க்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்து இருநூற்று தொண்ணூற்றிரண்டு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கிராம அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட குரூப்-4 பதவிகளில் பலப் பிரிவு உண்டு. இருபது லட்சம் பேர் விண்ணப்பித்த இந்த தேர்வில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வு எழுதினார்கள். கொரோனா தொற்றுக்கு பிறகு மூன்று ஆண்டு இடைவெளியில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு இருப்பதாலும், தேர்வர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு இருப்பதாலும் காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்வர்கள் மத்தியிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தல்களாய் வெளிப்பட்டன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தொடர்ந்து காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.

இதையடுத்து அறிவிப்பு வெளியான போது வெறும் 7,301 காலி இடங்கள் என்று இருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக டிஎன்பிஎஸ்சி அதிகரித்து, சமீபத்தில் 10 ஆயிரத்து 178 இடங்களாக அறிவித்தது.  இதன் தொடர்ச்சியாக தற்போது காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.

அதன்படி, 5,321 இளநிலை உதவியாளர்கள், 3,377 தட்டச்சர்கள், 1,097 சுருக்கெழுத்தர்கள், 425 கிராம நிர்வாக அலுவலர்கள், 69 பில் கலெக்டர்கள், 20 கள உதவியாளர், ஒரு இருப்பு காப்பாளர் என 10,292 காலி பணியிடங்கள் குரூப்-4 பதவிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version