தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும்: தமிழக அரசு

தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்க கோரி மீனவர் நல சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில், வழக்கு தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு திடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச்10ஆம் தேதி நிலவரப்படி இலங்கை சிறையில் 3 தமிழக மீனவர்கள் மட்டுமே உள்ளதாகவும், 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு, கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளதாவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு 250 ரூபாய் வழங்கப்படுவதாகவும், ஆயிரத்து 750 மீனவ குடும்பங்களுக்கு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அமல்படுத்த 286 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, 750 படகுகள் கட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டனர். இந்த திட்டங்களை அமல்படுத்தியதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கும் நீதிபதிகள் பிறப்பித்தனர். இதனை அடுத்து வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version