குழந்தையின் வயிற்றில் 3 கருக்கள்.. என்னங்க சொல்றீங்க..!

14 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் 3 கருக்கள் இருந்துள்ளது. 5 லட்சத்தில் 1 குழந்தைக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிறந்து 14 நாட்களே கடந்த பச்சிளம் குழந்தையின் வயிற்றில் 3 கருக்கள் இருந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உடல்நலக் குறைவால் வாரணாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்குச் சுவாச கோளாறு பிரச்சனை உள்ளது, மேலும் குழந்தையின் உடலும் வீக்கமாக இருந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தைக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்கள், குழந்தையிn வயிற்றில் மூன்று கருக்கள் இருப்பது கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, 3 நாட்கள் வரை நடைபெற்ற சிகிச்சையில் குழந்தையின் வயிற்றில் இருந்து 3 கருக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், இது போன்ற குறைபாடுகள் 5 லட்சத்தில் 1 குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். குழந்தை உருவாகும் போது, தாயின் வயிற்றில் இருக்கும் இதர கரு குழந்தையின் வயிற்றில் சென்று இருப்பதினால் இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தை நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 14 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் உள்ள கருக்களை வெற்றிகரமாக நீக்கிய மருத்துவக் குழுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் சென்ற ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து எட்டு கருக்களை மருத்துவர்கள் அகற்றியது குறிப்பிடத்தக்கது.

– ராஜா சத்யநாராயணன், செய்தியாளர்.

 

Exit mobile version