திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோதல்: காயமடைந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மாணவன் பலியானான்.

என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேருந்து நிறுத்தம் அருகே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 6-வது முதல் 12-ம் வகுப்பு வரையில் சுமார் 916 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 9-வது வகுப்பு இ 3 பிரிவில் மதுரைவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்(வயது14), ஆரணி சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது14) என்ற மாணவர்கள் படித்து வந்தனர். இந்நிலையில்,இந்த இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவது, கொடுப்பது சம்பந்தமாகவும், தமிழ்ச்செல்வனை கருப்பு கட்டப்பா என்று ஸ்ரீராம் கூப்பிட்டு வந்ததாலும் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று மதியம் 2 மணிக்கு வகுப்பறையில் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், தமிழ்ச்செல்வன் மயங்கி கீழே விழுந்தான். இதனைக் கண்ட அருகில் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர்.இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் தமிழ்ச்செல்வனை மீட்டு ஆரணி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

மாணவர் மரணம்…

அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் காட்டுத் தீயாக பரவியது. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார், பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.  ஸ்ரீராமை போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மாணவன் உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

விடியா திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஸ் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்று சட்டசபையில் மாணவர்களின் நலனுக்கு என்று சில திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் அவர் மாணவர்களிடையே தொடர்ந்து இது போன்ற மோதல் போக்குகள் நடைபெற்று வருவதற்கு என்ன தான் செய்ய உள்ளார் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டுவது இந்த ஆட்சியின் அவலமாக பார்க்கப்படுகிறது. இந்த விடியா திமுக ஆட்சி பள்ளியில் மாணவர்களை உருவாக்காமல் வன்முறையாளர்களை உருவாக்குகிறதா என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

Exit mobile version