6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ”சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), வேப்பூர் (கடலூர்) ஆகிய இடங்களில் தலா 13 செ.மீட்டரும், கட்டுமயிலூரில் (கடலூர் ) 12 செ.மீட்டரும், சிதம்பரம் (கடலூர்), கலசப்பாக்கத்தில் (திருவண்ணாமலை) தலா 9 செ.மீட்டரும், காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை ), கோபிச்செட்டிபாளையம் (ஈரோடு ), ஆம்பூர் (திருப்பத்தூர்), சேத்பட் (திருவண்ணாமலை), லக்கூர் (கடலூர்) ஆகிய இடங்களில் தலா 8 செ.மீட்டரும், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி (திருப்பத்தூர் ), மைலம்பட்டி (கரூர் ), அகரம் சீகூர் (பெரம்பலூர் ), வெம்பாக்கம் (திருவண்ணாமலை ) ஆகிய இடங்களில் தலா 7 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

மத்திய வங்கக் கடல் பகுதியில், தென்மேற்குத் திசையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exit mobile version