சிக்னல் கோளாறினால் ஒரே பாதையில் எதிரெதிரே வந்த ரயில்கள், ரயில்வே ஊழியர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மதுரை, செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கள்ளிக்குடி நோக்கி சென்றுள்ளது. ரயில் திருமங்கலம் ரயில்நிலையம் அருகே உள்ள கேட்டைக் கடந்ததும் கேட் கீப்பர் கள்ளிக்குடி ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் இந்தப் பாதை வழியாக கள்ளிக்குடியிலிருந்து புறப்பட்ட ரயில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக எதிர்முனையில் இருந்த ரயில்வே ஊழியர் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்ட இரண்டு ரயில்களையும் பாதி வழியிலேயே நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை செங்கோட்டை ரயில் மீண்டும் திருமங்கலத்திற்கு இயக்கப்பட்டு நிலைமை சரி செய்யப்பட்டது. எனினும் தொடர்ச்சியான சிக்னல் கோளாறினால் அடுத்தடுத்து வந்த ரயில்களும் தாமதமானதால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post