டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்..? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

தமிழ்நாட்டில், டாஸ்மாக் மது விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பணிநேரத்தை, காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, பகல் 12 மணி முதல் இரவு 10 வரை மாற்றி கடந்த 2ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், அது சட்டவிரோதம் என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்பதால், பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாகமும் ஜனவரி 18ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

 

Exit mobile version