முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல்!

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாக ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்னையை இழந்து வாடும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. தமிழக தலைவர் எல்.முருகன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கராத்தே தியாகராஜன், சரத்குமார், சபாநாயகர் தனபால் உள்பட பல அரசியல் கட்சிப் பிரமுகர்களும் முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும், புதுச்சேரி அ.தி.மு.க. சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார். திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோரும் முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version