கைப்பற்றிய படகுகளை பராமரிக்காத இலங்கை – தமிழர்களின் 121 படகுகள் முற்றிலும் சேதம்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

கடந்த 3 ஆண்டுகளாக மன்னர் வளைகுடா, வங்காள விரிகுடா உள்ளிட்ட பல்வேறு கடல் பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இது மட்டுமின்றி மீனவர்களின் 174 படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனையடுத்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், படகுகளை மீட்டுதர வேண்டும் எனவும் மீனவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து இலங்கை அரசு 174 படகுகளையும் விடுவித்தது.

இந்த படகுகள் தற்போது பயன்படுத்தும் சூழலில் உள்ளதா என மீன்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட 15 பேர் கொண்ட குழு இலங்கை சென்று ஆய்வு மேற்கொண்டது.

அதில் 174 மீன்பிடி படகுகளில் 121 படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படகுகளை சீரமைக்க மத்திய மாநில அரசுகள் நிதி உதவி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version