தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

கோடையையொட்டி சென்னை அண்ணாநகரில் தமிழக அரசு சார்பில் செயல்படும் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் அதிகளவில் கோடை நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி அண்ணாநகர் கிழக்கு கிளப் சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் செயல்படும் நீச்சல் குளத்தில் கோடை பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் வரும் 7ம் தேதி வரை முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நிலையில், வரும் 8ம் தேதி முதல் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் அண்ணாநகரை சேர்ந்த மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.

12 நாட்கள் அளிக்கப்படும் இந்த பயிற்சியின் முடிவில் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மேலும் சிறப்பாக செயல்படும் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுவதாக பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version