தற்கொலை செய்தவரின் உடல்மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய இறுதிச்சடங்கு!

madurai couple suicide

தற்கொலை செய்து கொண்டவரின் உடல் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய இறுதிச் சடங்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சூலூரில் அரங்கேறியுள்ள அந்த விநோத சடங்கு குறித்து பார்ப்போம்.

உடுக்கைகள் முழங்க, சடலத்தின் மீது அமர்ந்து அகோரி ஒருவர் பூஜை செய்த காட்சிதான் நீங்கள் பார்த்தது. சடலமாகக் கிடப்பது திருச்சியை சேர்ந்தவரும், தற்போது கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்பப்பாளையத்தில் வசித்து வந்தவருமான 32வயது மணிகண்டன் ஆவார். கோவையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்த மணிகண்டன், கோவை ராமநாதபுரத்தில் இருக்கும்பொழுது 8 வருடங்களுக்கு முன்பாக சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர் டயானாவுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சரண்யா, புளியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மணிகண்டனை அழைத்து அறிவுரை சொன்னபோதும், அவர் மனைவியை விட்டு விட்டு கடந்த ஒரு மாதமாக டயனாவுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மே 27ஆம் தேதி டயானாவுக்கும் மணிகண்டனுக்கும் பிரச்சனை ஏற்படவே, மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடல் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடலை எரியூட்டுவதற்காக சூலூர் மின்மயானத்துக்கு எடுத்து வந்துள்ளனர். அப்போது உயிரிழந்த மணிகண்டனின் சிறுவயது நண்பரான திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன், தனது சிஷ்யர்களுடன் அங்கு வந்து உடலுக்கு பூஜைகள் செய்துவிட்டு, சடலத்தின் மீது அமர்ந்து தியானம் செய்தார்.

காசியில் நடைபெறுவது போல சூலூரிலும் அகோரி செய்த விநோத பூஜைகள் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மணிகண்டனின் உடல் எரியூட்டப்பட்டது.

– சூலூர் செய்தியாளர் நேச பிரபு மற்றும் ஆசாத்.

Exit mobile version