ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.76 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 76 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடெங்கிலும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து சென்றால், தேர்தல் பறக்கும் படையினர் மூலமாக பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, உதகையை அடுத்த தலைகுந்தா – கூடலூர் சாலையில் அத்திக்கல் பகுதியில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றி ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப எடுத்து செல்லப்பட்ட 76 லட்சம் ரூபாயை அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பணத்தை பறிமுதல் செய்துள்ள பறக்கும் படையினர், உரியவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 76 லட்சம் ரூபாய் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Exit mobile version