வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு துணை தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னையில் பயிற்சி அளிக்க உள்ளனர்.

வரும் மே 19 ஆம் தேதியுடன் 17-வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் பதிவான வாக்குகள் மே 23 ஆம் தேதி ஒரே நாளில் எண்ணப்பட உள்ளன. இதற்கான ஏற்பாட்டு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக தமிழகம், கேரளா, குஜராத், யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜைன் ஆகியோர் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

அப்போது வாக்கு எண்ணிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணி குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

Exit mobile version