தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்கட்டமாக ரூ.137 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் புதிதாக துவங்கப்படவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்கட்டமாக மத்திய அரசு 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி துவங்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்காக 1,170 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில், முதல்கட்டமாக 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தற்போது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 22 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version