கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின், செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு விடியா முதல்வர் ஸ்டாலின் மற்றும் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆள்வதால் பொதுமக்கள் வேதனையை அடைந்துள்ளதாகவும் கூறினார். மேலும் கள்ளச்சாராயம் பெருகி உள்ளது குறித்து, தான் சட்டமன்றத்தில் பேசியும் விடியா அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், அதை தடுக்க விடியா அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்திருக்காது என எதிர்க்கட்சித்தலைவர் காட்டமாக தெரிவித்தார். மேலும் இதற்காக முழு பொறுப்பை விடியா முதல்வர் ஸ்டாலின் ஏற்று, தார்மீகமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், விடியா முதல்வர் பதவி ஏற்றதிலிருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளது என்றும் அதேப்போல் கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க, டிஜிபி 2 பாயிண்ட் ஓ திட்டத்தை அறிவித்தார். பின்னர் 3 பாயிண்ட் ஓ திட்டத்தை அறிவித்தார். அந்த வகையில் ஓ போடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்களே தவிர, சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனையை தடை செய்யவில்லை என விமர்சித்தார். மேலும் இந்த திறமையற்ற முதல்வர், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை எனவும் காட்டம் தெரிவித்தார்.

மேலும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சென்று அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த விடியா அரசு 500 மதுபானக்கடைகளை மூடுவதாக சொல்லி ஆயிரம் மதுபானக்கடைகளை திறக்கிறது என குற்றம்சாட்டினார்.

மேலும் திருமண மண்டபம் மற்றும் விளையாட்டு அரங்கில் மதுபான பயன்பாட்டிற்கு அனுமதியளித்து சட்ட கொண்டு வந்து, மதுவை ஊக்குவிக்கும் அரசு இந்த விடியா திமுக அரசு என்றும், விடியா முதல்வர் ஸ்டாலின் மற்றும் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இதற்கு தார்மீக பொறுப்பேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் காட்டம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாமக்கல்லில் வடமாநில தொழிலாளர்கள் ஆலையில் தூங்கி கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆளுவதே காரணம் என சாடினார்.

Exit mobile version