திம்பம் மலைப்பாதையில் வனவிலங்குகளுக்கு குடிநீர்த் தொட்டி அமைக்கக் கோரிக்கை

திம்பம் மலைப்பாதையில் உள்ள குரங்குகளின் தாகம் தீர்க்க, குடிநீர்த் தொட்டி அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையானது சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்கு உட்பட்டது. இந்த மலையில் ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. இந்த மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது வனப்பகுதிகளில் பருவ மழை இல்லாததால் வன விலங்குகள் தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக நடமாடுகின்றன.

குரங்குகள் குடிநீருக்காகத் தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்களை எதிர்பார்த்து நிற்கின்றன. சில சமயங்களில் மலைப்பாதையில் வாகனங்கள் நிறுத்தும்போது வாகனங்களில் உள்ள தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு செல்கின்றன. இதனால் வனப்பகுதிகளின் ஓரங்களில் சிறு சிறு தொட்டிகள் அமைத்து வறட்சிக் காலங்களில் தண்ணீர் நிரப்பி விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Exit mobile version