சேலத்தில் திமுக பிரமுகரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை

சேலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் திமுக பிரமுகரை,  க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக தூக்கி சென்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர், திமுகவில் அயோத்தியாப்பட்டண ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்த அவர், தற்போது கிழக்கு மாவட்ட திமுகவில் அவ்வொன்றியத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். நேற்று மாலை 4.30 மணியளவில், வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று இரண்டு கார்களில் வந்த, ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் அவரை தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் வர மறுத்த நிலையில் நான்கு பேரும் சேர்ந்து பலவந்தமாக இழுத்துச் சென்று காருக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டு அவசரமாக சென்றனர்.

இதையடுத்து விஜயகுமார் கடத்தப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் விஜயகுமாரின் ஆதரவாளர் அம்மாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எதற்காக க்யூ பிரிவு போலீசார் திமுக பிரமுகரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்?

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகம் கடந்த மாதம் 28ம் தேதி கேரளாவில் சுட்டு கொல்லப்பட்டார். மணிவாசகத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் யார். என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சேலம் அயோத்தியாபட்டிணம் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் என்பவரை க்யூ பிரிவு போலீசார் அவரது வீட்டிற்கு சென்று இழுத்து சென்றனர்.

கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட மணிவாசகம் இறப்பதற்கு முன் விஜயகுமாரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதற்காகத்தான் க்யூ பிரிவு போலீசார் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர் என்று கூறப்படுகிறது. திமுக பிரமுகர்கள் சட்ட விரோதமாக பல செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நடந்த திமுக பிரமுகர் விஜயகுமார் விசாரணை பொதுமக்களிடம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Exit mobile version