கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கூறி வந்த போலி மருத்துவர் கைது

சென்னை, வேளச்சேரியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என சட்ட விரோதமாக தெரிவித்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரி-தரமணி பிரதான சாலையில் சிவசங்கர் என்பவர் சென்னை ஸ்கேன் சென்டர் என்ற பரிசோதனை நிலையத்தை கடந்த 12 வருடங்களாக நடத்தி வந்தார். பரிசோதனை நிலையம் துவங்கிய 5 வருடம் முறையாக மருத்துவரை வைத்து சிகிச்சை அளித்து வந்த சிவசங்கர், மருத்துவரிடமிருந்து அனைத்து வேலைகளையும் கற்றுக் கொண்டு மருத்துவர் இல்லாத நேரத்தில் அவரே மருத்துவராக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

மேலும் அதே பரிசோதனை நிலையத்தில் கர்ப்பிணி பெண்களிடம் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என குழந்தை பிறப்பதற்கு முன்னரே சட்டவிரோதமாக கூறி வந்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அவர்கள் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மருத்துவம் படிக்காமலேயே மருத்துவர் என கூறி பரிசோதனை மையத்தில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.இதனையடுத்து போலி மருத்துவர் சிவசங்கரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version