திருப்பூர் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் – பிரதமர் உரையாற்றுகிறார்

திருப்பூரில் இன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூரில் இன்று அரசு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், முதலில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல்வேறு புதிய திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். இதனைத்தொடர்ந்து, நடைபெறவுள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் 50 பேர் பெருமாநல்லூரில் கடந்த வியாழக்கிழமை முதல் முகாமிட்டுள்ளனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version