கோஷ்டி பூசல்களுக்கு பெயர்போன கட்சி காங்கிரஸ்… தேசம் முழுவதும் அக்கட்சிக்கு இருக்கும் கிளைகளை விட கோஷ்டிகளுக்கான கிளைகள் பல மடங்கு அதிகம் எனலாம்… இதனிடையே மக்களவை தேர்தல் வரை நான் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் என முழங்கியவர் அடுத்த சில நாட்களிலேயே கோஷ்டிகளின் சதியால் அப்பதவியிலிருந்து தூக்கிவீசப்பட்டார்… இந்தநிலையில் அவரை தக்கவைத்துக்கொள்ள சீட் கொடுத்து சரிக்கட்டி இருக்கிறது காங்கிரஸ் தலைமை… ஏனெனில் அவரின் தாவல் சாதனைகள் அவ்வளவு பெரிது… அந்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் திருநாவுக்கரசர்…
1977ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் அறந்தாங்கியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருநாவுக்கரசர், 1980, 1984, 1989 தேர்தல்களிலும் வென்றார்… 1991ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து வெளியேறிய அவர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனி கட்சி துவங்கி திமுகவுடன் கூட்டணி வைத்தார்…
மீண்டும் திடீரென அதிமுகவில் இணைந்த திருநாவுக்கரசர், 1996ஆம் ஆண்டு அறந்தாங்கியில் போட்டியிட்டு வென்றார். இதனிடையே அதிமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார். 1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனையடுத்து அடுத்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பிடித்தார் திருநாவுக்கரசர்.பின்னர் தனது எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்த அவர், அடுத்த சில ஆண்டுகளிலேயே பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார்.
தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த திருநாவுக்கரசர், தனது தாவல் வரலாற்றை கட்சியின் தலைமையிடம் கூறி குழப்பத்தை தவிர்க்க திருச்சி மக்களவை தொகுதியைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது…
Discussion about this post