திமுக ஐ.டி. விங் பதவியிலிருந்து விலகல்..! ஓரம்கட்டப்படுகிறாரா..? பி.டி.ஆர்

உட்கட்சி மோதல் காரணமாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விலகியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முதல்முறையாக அண்ணா திமுக தான் துவக்கியது. 2014 மக்களவை, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இதனால், அண்ணா திமுகவின் வழியை பின்பற்றி திமுகவும் 2017-ல் தகவல் தொழில்நுட்ப பிரிவை உருவாக்கி அந்தப் பொறுப்பை பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைத்தது.

மூன்று ஆண்டுகள் பதவி வகித்த பழனிவேல் தியாகராஜன் தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பிடிஆருக்கு பிடிக்காதவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவில் அடுத்தடுத்து நியமனம் செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணைச் செயலாளராக கோவை மகேந்திரன், மாநில ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டது பிடிஆருக்கு பிடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

அந்த அதிருப்தியில் தான், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விலகியதாக கூறப்படுகிறது.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களுக்கும் மேலாகியும், அதன் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பிரச்னைகளை சரிவர கையாளவில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள், விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்குகிறது என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version