புத்தாண்டின் முதல் நாளில் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை மாநகரில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை சராசரிக்கும் குறைவாகவே பொழிந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

ஆங்கிலப் புத்தாண்டின் முதல்நாளிலேயே நல்ல மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். காலையில் மீண்டும் பலத்த மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் சாலைகளில் வாகனங்கள் ஓரளவுக்கு மெதுவாக இயக்கப்பட்டன. சென்னையில் கோயம்பேடு, வடபழனி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. புத்தாண்டு விடுமுறை என்பதால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவாகக் காணப்பட்டதால் பலத்த மழை பெய்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதாலும், தூசி புகை ஆகியவற்றின் தாக்கம் குறையும் என்பதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version