தீபாவளியன்று சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

 

“பிகில்” உள்ளிட்ட எந்தத் திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை எனவும், விதியை மீறிச் சிறப்புக் காட்சி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அதிகக் கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்த கேள்விக்கு, தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், அதை மீறிச் சிறப்புக் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக கட்டணம் வசூல் செய்தாலோ அரசு பொறுப்பு ஏற்காது எனவும், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version