இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! எதற்கெடுத்தாலும் காசு கேட்கும் அரசு மருத்துவமனை! சுகாதாரத்துறையை சீரழிக்கவே அமைச்சர் ஆக்கப்பட்டாரா மா.சு?

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வந்த தனியார் ஸ்கேன் நிறுவனம் பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் ஸ்கேன் எடுக்க குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது…..இது தெரியாமலயே ஒரு அமைச்சர் சுகாதாரத்துறையை நிர்வகித்து வருகிறார் என்பது தான் தற்போதைய அரசின் கவலைக்குரிய நிலை….10 நோயாளிகளிடம் தலா ரூ.2,500 வீதம் கட்டணம் வசூலித்ததும், எங்கே இது இந்த விடியா அரசுக்கு எதிரான எண்ணத்தை மக்களிடம் அதிகரித்துவிடுமோ என்கிற அச்சத்தில் அவசர அவசரமாக அங்கு சென்று, ஆய்வு என்கிற பெயரில் நாடகம் நடத்தியிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தேனி மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இப்படி தான் சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. பணம் கொடுத்தால் தான் சிகிச்சையே என்கிற நிலை தான் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நீடிக்கிறது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு வருகை தருவது தங்களிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு பணம் இல்லை என்கிற ஒரே காரணத்தால் தான். ஆனால் அரசு மருத்துவமனையும், தனியார் மருத்துவமனைகள் போல ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக பணம் பறிப்பது, மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் பொதுமக்கள் உடல்நிலை சரியில்லாமலும், விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டாலும் போதிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் இல்லை, செவிலியர்களும் இல்லை என்பதே பதிலாக வருகிறது. இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களை மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு மாற்றப்படும் சூழ்நிலை இருக்கிறது.

பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில், ஸ்கேன் வசதி இல்லாத காரணத்தால், பொதுமக்கள் தனியார் ஸ்கேன் நிறுவனங்களை நாடிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். பல இடங்களில் அரசு மருத்துவமனைகளில் முறையான வசதிகள் இல்லாத நிலையே நீடிக்கிறது

பெயருக்கு ஒரு மருத்துவமனைக்கு சென்று, ஆய்வு என்கிற பெயரில் அமைச்சர் நாடகம் ஒன்றை நடத்திவிட்டு செல்வதன் நோக்கம் என்ன? அரசு மருத்துவமனைகளை அழிக்கத்தான் அமைச்சராக இருக்கிறாரா மா.சு? என்ற கேள்வியைத்தான் முன்வைக்கின்றனர் மக்கள்.

 

Exit mobile version