இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மதுரை மாநாட்டிற்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள்! தொலையப்போகிறதா திமுகவின் தூக்கம்?

எப்போது விடியும்… எப்போது விடியும்… என்று கேட்டுக்கொண்டிருந்தவர்கள், இன்று ஐயையோ.. இந்த விடியா ஆட்சி எப்போது முடியும்? எப்போது முடியும் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.. .அந்தளவுக்கு கொடுமையின் ஆட்சி நடக்கிறது தமிழ்நாட்டில்… ஒவ்வொரு நாளும் மழை நிலவரம் போல கொலை நிலவரம் வருகிறது.. சாதியின் பெயரால் குழந்தைகள் கூட ஒருவருக்கொருவர் வெட்டிக்கொள்கின்றனர்… அதைத் தருகிறோம் இதைத்தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் நாங்க என்ன தேதியா சொன்னோம்? என்று எக்காளமிடும் கூட்டத்தை ஒடுக்க, மக்களை காக்க, பெண்களின் உரிமைகளை மீட்க, ஏழைகளின் வாழ்வை உயர்த்த, ஒளி வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு இதோ நாங்கள் இருக்கிறோம் என்று தோளில் தட்டி அரவணைக்க என்றுமே இருக்கும் ஒரே மக்கள் இயக்கம் அதிமுக தான்…

27 மாதங்களாக தமிழ்நாட்டு மக்கள் வடிக்கும் கண்ணீரைத் துடைத்து, திமுகவிற்கு பாடம் புகட்ட புறப்படப்போகிறது தொண்டர்படை… மதுரையில் நடக்கப்போகிறது வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு …. ஒட்டுமொத்த ரத்தத்தின் ரத்தங்களும் ஒன்றுகூடப்போகிறது… 20 லட்சத்திற்கும் மேல் திரளப்போகிறது தொண்டர் படை… மதுரையே குலுங்கப்போகிறது… தமிழகமே அதிரப்போகிறது…

இதையெல்லாம் தெரிந்துகொண்டதால், அச்சத்தில் நடுங்கி அதன் தலைவர் ஸ்டாலினும், அதிமுக மாநாட்டை சீர்குலைக்கவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் உதயநிதியை வைத்து உண்ணாவிரத நாடகம் நடத்தப்போகிறது திமுக…..

பலே பலே.. மாநாடு நடப்பதற்கு முன்னரே அதன் வெற்றியை உறுதி செய்திருக்கிறது திமுகவின் உண்ணாவிரத அறிவிப்பு… எப்பாடு பட்டாவது மாநாட்டு ஏற்பாடுகளை நிறுத்தி விடலாம் என்று எண்ணி சகுனி வேலைகளை ஜரூராகச் செய்த திமுகவுக்கு வெறும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.. சட்டப்போராட்டங்களால் நீதிமன்றம் வரை சென்று மாநாடு நடப்பதை சட்டப்படி உறுதி செய்திருக்கிறது அதிமுக… இதைக்கண்டு இடிந்துபோன திமுக, புல்லுறுவிகளை வைத்து, அது சரி இல்லை இது சரி இல்லை… அவர்கள் வரவில்லை.. இவர்கள் வரவில்லை என்று பொய் செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறது பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கூட்டம் ஒன்று.. ஆனால் எதற்கும் அஞ்சாத சிங்கமல்லாவா அதிமுக… சிங்கம் வளர்த்த புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட இயக்கம், சிங்கப்பெண் புரட்சித்தலைவியால் வலுப்பெற்ற இயக்கம்,,, வாழும் அஞ்சா சிங்கம் எடப்பாடியாரை தன் தலைமையாக தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட இயக்கத்தின் முன் புழுதிகள் பறக்குமா? திட்டங்கள் பலிக்குமா? திமுகவின் வஞ்சக எண்ணங்கள் தவிடுபொடி ஆகியிருக்கிறது…

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து புதுப்பாய்ச்சலோடு இயங்கிவரும் அதிமுகவின் தொண்டர்படை அடுத்த புதிய அத்யாயத்தில் காலடி எடுத்து வைக்கபோகிறது.. புரட்சித்தலைவிபோலவே, அவரின் தலைமகன் எடப்பாடியாரும், தேர்தல் களத்தில் முதல் ஆளாய் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.. மாபெரும் மாநாடு நடத்தி அதை நிரூபிக்கவும் போகிறார்…

ஆக, ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் புரட்டிப்போடப் போகிறதா அதிமுகவின் மதுரை மாநாடு ? 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கப்போகிறதா இந்த மதுரை மாநாடு ? அதிமுக மாநாட்டால் தொலையப்போகிறது திமுகவின் தூக்கம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Exit mobile version