இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! விலைவாசி உயர்வால் திமுகவை வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டார்களா மக்கள்?

கிலோ தக்காளி எவ்வளவு என்று கேட்டால் ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும் இல்லத்தரசிகளுக்கு… வெங்காயம், இஞ்சி, காய்கறி என்று எதைக்கேட்டாலும் விண்ணை முட்டும் அளவிற்கு விலை சொல்லும் கடைக்காரர் மீது கோபத்தை கொப்பளித்துவிட்டு, சரி, நீங்க என்ன பண்ணுவீங்க, அரசாங்கமே அந்த லட்சணத்தில் இருக்கு என்று அரசையும் கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கின்றனர் தமிழ்நாட்டு இல்லத்தரசிகள்..

ஆனால் இதையெல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத விடியா திமுகவின் முதல்வர் ஸ்டாலினோ, பீகார் , பெங்களூரு என்று அரசியல் டூர் போய்க்கொண்டிருக்கிறார்… உள்ளூரிலேயே மக்கள் பிரச்சனையைத் தீர்க்க வழிதெரியாதவர் அங்கே நாட்டு பிரச்சனையை என்ன செய்யப்போகிறார் என்று கிண்டலும், கேலியுமாய் பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கிறது தமிழகம் முழுக்க…

இந்தவேளையில்தான், விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய விடியாத இந்த ஆட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தியது அதிமுக…. இதில் முன்னாள் அமைச்சர்களே, வெங்காய மாலை, தக்காளி மாலை சகிதமாக, மேடையில் வந்து முதல்வர் ஸ்டாலினின் திராணியற்ற ஆட்சியை கிழித்து தொங்கவிட்டுவிட்டனர்… இதில் ஹைலைட்டே என்னவென்றால், இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுகவினருக்கு நிகராக, பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்…

ஜிம்மின் சென்று, ஒர்க்கவுட் செய்யும் ஸ்டாலினுக்கு ரேஷன் கடையில் கால் கடுக்க காத்திருக்கும் மக்களின் பிரச்சனைகள் எப்படி புரியப்போகிறது? ஈசிஆர், ஓஎம்ஆர் என்று சைக்கிளில் செல்லும் முதல்வர் கொஞ்சம் தன் சைக்கிளை மார்க்கெட் பக்கம் திருப்பியிருந்தால் விலைவாசி உயர்வு என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்… ஆனால் , அவர்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் அமைக்கிறேன் என்று டூர் டூர் ஆகப் போகிறாரே ஒழிய தமிழ்நாட்டு மக்களின் பஞ்சம் பட்டினி அறியவில்லையே…

முன்னாள் அமைச்சர்களை எப்படி கைது செய்யலாம், எதிர்க்கட்சிகளை எப்படி முடக்கலாம் என்று மட்டுமே சதாசர்வகாலமும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு முதல்வர்… ஊழல் செய்த அமைச்சர்களை எப்படி காப்பாற்றுவது என்று மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கும் ஒரு முதல்வர் எப்படி மக்கள் பிரச்சனைகளை சிந்திப்பார் என்று குமுறுகிறார்கள் இதையெல்லாம் உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் இல்லத்தரசிகள்…

இந்தவேளையில்தான், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், எப்போது நாடாளுமன்ற தேர்தல் வரும், எப்போது எங்களுக்கு உண்மையான விடியல் கிடைக்கும்? என்கிற கேள்வியையே முன்வைத்தனர். அந்த அளவுக்கு இந்த விடியா திமுக ஆட்சியின் இரண்டாண்டு கால அரசில் கொடுமைகளை சந்தித்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்

ஆக, விலைவாசி உயர்வால் கொதித்தெழுந்து, இந்த விடியா திமுகவை வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள்… அதன் வெளிப்பாடுதான் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இன்று நாம் பார்த்த எழுச்சி என்பதுதான் நிதர்சனம்.

Exit mobile version