இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நாடாளுமன்றத் தேர்தலுக்கு முதல் கட்சியாய் ஆயத்தமாகும் அதிமுக!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் கட்சியாய் களத்திற்கு வந்த அதிமுகவின் வெற்றி சூட்சமம் என்ன ? தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வகுத்திருக்கும் வெற்றி வியூகம் என்ன? என்பதைத்தான் மற்ற கட்சிகள் எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க பணிகளையும் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி. பழைய உறுப்பினர் அட்டைகள் புதுப்பிக்கப்பட்டதோடு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடக்கும் நிலையில் இன்றைக்கு அதிமுகவில் 1கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகவும் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

பூத் கமிட்டி, பாசறைகள் எல்லாம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டிற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார். ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் நிலையில், மதுரை மாநாடு மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்று கணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்…

விடியா திமுக அரசின் இரண்டாண்டு கால ஆட்சிக் காலத்தில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்களை சந்தித்து வரும் மக்கள், எப்போது தான் நமக்கு உண்மையான விடியல் ஏற்படும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கையை பெறும் விதமாக அதிமுகவும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு முதல் பல்வேறு வரிகள் உயர்வு வரை திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டிருக்கின்றன.
தேர்தல் என்றாலே களத்திற்கு முதல் ஆளாய் வந்து நிற்பது அதிமுக… கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர் தேர்வு என்று எல்லா விதத்திலும் நெம்பர் ஒன்னாகவே இருக்கிறது அதிமுக. புரட்சித்தலைவியின் வழியில், தற்போது எடப்பாடி கே பழனிசாமியும் நெம்பர் ஒன்னாக களத்தில் குதித்திருக்கிறார்..

அதேவேளையில், தேசிய அரசியலில் கால் பதித்துவிடலாம், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துவிடலாம், அதனால் நம்முடைய பெயரும் தேசிய ஊடகங்களில் அடிக்கடி பேசப்படும் என்கிற ஆர்வத்தில் ஸ்டாலின் கனவு கண்டுகொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் இந்த முன் நகர்வுகள் திமுகவுக்கு கொஞ்சம் அச்சத்தைத்தான் கொடுத்திருக்கிறது.

2011ம் ஆண்டு திமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது அதிமுகவின் கோவை மாநாடு. அதேபோல அதிமுகவின் மதுரை மாநாடு இந்த விடியா திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையில் அமையும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது அதிமுக தொண்டர்கள் மத்தியில்..

நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் கட்சியாய் களத்திற்கு வந்த அதிமுகவின் வெற்றி சூட்சமம் என்ன ? தமிழகம் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வகுத்திருக்கும் வெற்றி வியூகம் என்ன? என்பதைத்தான் மற்ற கட்சிகள் எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

Exit mobile version