இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கூட்டணிக் கட்சியினரை கிஞ்சித்தும் மதிக்காத ஸ்டாலின்!

சமூகநீதி..சமூகநீதி என்று சொல்லி சொல்லியே ஆட்சிக் கட்டிலில் ஏறிய திமுக, காலம் போகப் போக தன் சுயரூபத்தைக் காட்டத்தொடங்கியது… திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கியது…

யாரால் ஆட்சியைப் பிடித்தார்களோ, யாரால் பதவிகளை அணுபவிக்கிறார்களோ அவர்களையே கழட்டி விடும் உக்தியை கையாண்டிருக்கிறது திமுக தலைமை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை எப்படி கழட்டி விடலாம் என்று பல மாதங்களுக்கு முன்னதாகவே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது திமுக… அதற்காக, கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் அதிருப்தியில் உள்ள திமுக சீனியர்கள் தொகுதிகளை இம்முறை மாற்றித் தர வலுவான திட்டம் ஒன்றினை தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அமலாக்கத்துறையால் அஸ்திவாரத்தையே இழந்த செந்தில்பாலாஜிக்கும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு உள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் விசுவாசிக்கு கரூர் எம்பி சீட் கொடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகிகள் திமுக மேலிடத்திற்கு சைஸாக காய் நகர்த்தி வருகிறார்கள் என்று தகவல் கசிந்துள்ளது.

ஈரோடு எம்பி கணேச மூர்த்திக்கு மீண்டும் மதிமுகவில் சீட் ஒதுக்காமல் அதனை திமுகவே எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக செலவு செய்தது போதும் என்று உடன் பிறப்புகள் ஸ்டாலினின் காதுகளை கடித்திருக்கின்றனர் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்..

விருதுநகரைப் பொறுத்தவரை மாணிக் தாக்கூர் வெர்சஸ் துரை வைகோ என்று சொல்லப்படுகிறது. கூட்டணியையே சிதைக்க நினைக்கும் திமுக ஒருபக்கம் என்றால், விருதுநகரில் காங்கிரஸும் மதிமுகவும் ஸ்பேரிங்க் போட்டுக்கொண்டு சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள்.

திருச்சியில், திருநாவுக்கரசருக்கு எதிராக தன் குடம்பத்தில் ஒருவருக்கு சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு . இப்படி கூட்டணிக்குள் சண்டை வளர்த்து, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிற காமெடி போல ஆகிவிட்டது திமுக என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்….

ஏற்கனவே, உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவிகளை கொடுக்காமல். ஸ்டாலின் சொல்லியும் கூட கேட்காமல், பிடுங்கி வைத்துக்கொண்டனர் திமுக உபிக்கள்…

இப்படி தொடர்ந்து கூட்டணி கட்சிகளை கிள்ளுக்கீரையாகத்தான் நடத்தப்போகிறதா திமுக? கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை கைப்பற்றி மேலும் தனது ஆட்டத்தை நடத்த தயாராகி விட்டாரா ஸ்டாலின்? கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்ததை மறந்து செயல்படுவதால் அவர்களின் ஆதரவையும் இழக்கப் போகிறாரா ஸ்டாலின் ? என்ற கேள்விக்கு இன்னும் சில மாதங்களில் பதில் கிடைக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Exit mobile version