இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அன்று ஆளுநர் தேவை! இன்று ஆளுநர் தேவை இல்லை! அந்தர் பல்டி அடிக்கும் ஸ்டாலின்!

அன்று, முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநரை வலியுறுத்திய ஸ்டாலின், இன்று, அமைச்சரை நீக்க அதிகாரமில்லை என்று குமுறுவது குறித்தும், ஆளுநரை வைத்து ஸ்டலின் நாடகமாடுவது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

நம்ம தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அடித்த அந்தர் பல்டி ட்வீட்கள் தான் இன்றைய வைரல் கண்டெண்ட்..

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை திமுக அரசு வைத்துள்ள நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு போட்ட பின் திமுக வட்டாரமே பரபரப்பானது… ஆனால் ஆளுநரே அதை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வந்தவுடன்… அச்சச்சோ அம்புட்டும் போச்சா.. இனி என்ன ஆகப்போகுதோ…. என்று இரவு முழுவதும் தூங்கமுடியாமல் தவித்திருக்கிறார் ஸ்டாலின்…

ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் உரிமை உண்டா இல்லையா என்பதை சட்டம் படித்தவர்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க… ஆளுநர் அறிவிப்பை வெளியிட்ட உடன் முதல்வர் ஸ்டாலின் பதறிப்போய் ஒரு பேட்டி கொடுத்தார்… ஆளுநருக்கு அமைச்சரை நீக்க அதிகாரமில்லை என்றும், சட்டப்படி சந்திப்போம் என்றும் சவால்விட்டார்.. ..

இன்றைய முதல்வர் ஸ்டாலினின் நிலை இப்படி இருக்க, எதிர்கட்சியாக இருந்தபோது ஆளுநருக்கு கடிதம் எழுதியதெல்லாம் நினைவில் இருக்குமா என்று நெட்டிசன்கள் ஸ்டாலினின் பழைய ட்வீட்களை ரீட்வீட் செய்து வருகின்றனர்…

கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சரை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எழுதிய ஸ்டாலின்… இன்று இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியதால் அவருக்கு அதிகாரமில்லை என்று சொல்கிறார்…

அன்று ஏன் அப்படி ஒரு கடிதத்தை எழுதினார்?….. சரி தெரியாமல் எழுதினார் என்று வைத்துக்கொண்டாலும்…. குற்றம்சாட்டப்பட்டு விசாரணை கைதியாக இருக்கும் ஒருவரை அமைச்சர் பதவியிலயே வைத்திருந்தால் எப்படி விசாரணை ஒழுங்காக நடக்கும்?…..

வருமான வரித்துறை ரெய்டு நடந்த போது ரவுடித்தனம் செய்த கும்பல் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்… அதை மனதில் வைத்துக் கொண்டு செந்தில் பாலாஜியை முதல்வரே பதவிநீக்கி இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்….

முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டால் தானே செந்தில்பாலாஜி கைதாகி இருக்கிறார்?…..பிறகு எதற்காக தனது அமைச்சர் செந்தில்பாலாஜியை தற்போது காப்பாற்ற ஸ்டாலின் போராடிக் கொண்டு இருக்கிறார்? அவரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதால் ஸ்டாலினின் பதவி பறிபோய்விடும் என்கின்ற பயமா?

தன்னை நிரபராதி என்று அமைச்சர் நிரூபிக்கட்டுமே… வேண்டாம் என்று யார் சொல்லப்போகிறார்கள்?…வெளிப்படையான நிர்வாகத்தை கொடுப்பேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை ஸ்டாலின் தொடர்ந்து செய்வது நியாயமா?…. ஆளுநரை வைத்து நாடகமாடுவதுதான் ஸ்டாலின் சொல்லும் “திராவிட மாடலா”? என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

Exit mobile version