இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! புரட்சித் தலைவியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் லியோனி!

ஒரு மேடையும் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும் திமுககாரர்களின் வாய் 7 முழத்துக்கு நீளும்.. என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று கூட யோசிக்காமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசித் தீர்ப்பார்கள் திமுகவின் உடன்பிறப்புகள்.. பட்டிமன்றத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை , வீட்டின் மனைவிமார்களை, மாமியார்களை, மருமகள்களை என்று வகைதொகையில்லாமல், எல்லோரையும் ஆபாசமாகப் பேசுவது, அசிங்கப்படுத்துவது என்று மேடைகள் மட்டுமின்றி தேர்தல் பிரச்சாரங்களிலும் பேசி பேசி திமுகவிற்கு இருக்கும் கெட்டபெயருக்கு மேலும் வலுசேர்த்து வரும் திண்டுக்கல் லியோனி, தற்போது புரட்சித்தலைவியைப் பற்றி பேசி மீண்டும் தானாக வந்து வம்பிழுத்திருக்கிறார்….

பெண்களை இப்படிப் பேசுவதுதான் திமுகவின் கொள்கையா? கோட்பாடா? ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் தாயாரை பழித்தார்… தமிழக அமைச்சர் பொன்முடியோ ஓசி டிக்கட் என்று தமிழ்நாட்டு பெண்களை இழித்தார்… மேடையிலேயே வைத்து, நீ எஸ்சிதானம்மா? என்று கேட்டு அவமானப்படுத்தினார்.. கேகேஎஸ்எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனோ, மனுகொடுக்க வந்த பெண்ணின் தலையைத் தட்டி அவமானப்படுத்துகிறார்.. பெண் காவலர்களையே சீண்டிப்பார்க்கிறார்கள் திமுகவினர்… ஸ்டாலினின் வாரிசு உதயநிதி, எத்தனை பெண்களை கொச்சைப்படுத்தி பேசி பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்டார்.. இவ்வளவு ஏன், திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி கூட, இந்திராகாந்தியைப் பற்றி பேசியதை நாடறியும்..

மேலிடத்தில் இருப்பவர்கள் இப்படி இருப்பதனால்தான் கடைக்கோடியில் இருக்கும் சாதாரண மேடைப்பேச்சாளர்கள் வரை பெண்களை அறுவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும், அசிங்கமாகவும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.. அன்றைய வெற்றி கொண்டான் முதல் இன்றைய சைதை சாதிக் வரை எல்லோரும் ஒரே படியாக பெண்களை கொச்சைப்டுத்துவதைப் பார்க்கும்போதுதான் திமுகவின் தரம் மக்களுக்கு புரிகிறது.

பெண் ஏன் அடிமையானாள்? என்று பெரியார் எழுதிய புத்தகத்தைப் படித்துக்கொண்டே, பெண்களை அடிமைப்படுத்துவது எப்படி என்று நடந்துகொள்கிறது திமுக… இதையெல்லாம் கண்டும் காணாததுபோல, கேட்டும் கேட்காததுபோல மௌனித்து நிற்கிறார் ஸ்டாலின்… பெண்களை ஆபாசமாய் பேசி, அசிங்கப்படுத்துவதால்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களும் திமுகவுக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டனர்.

ஏற்கனவே, பல பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல், திக்கித்திணறி, தூக்கம் தொலைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் தலைவலியை கொடுக்கும் லியோனி போன்றோர் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பெண்களைக்கூட மதிக்கத்தெரியாத லியோனி, எப்படி, குழந்தைகளை நல்வழிப்படுத்தம் பாடநூல் கழகத் தலைவராக செயலாற்றுவார்? பெண்களை கொச்சைப்படுத்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்காததால்தான் ஒட்டுமொத்த திமுகவினரே இப்படி வசைபேசித் திரிகிறார்களா? திமுக மீது ஆத்திரத்தில் இருக்கும் பெண்களை சமாதானம் செய்ய என்னசெய்யப்போகிறார் ஸ்டாலின்? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Exit mobile version