இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! இலாகா மாற்றத்திற்கு பிறகு “சைலண்ட் மோட்”-க்கு சென்ற அமைச்சர் பி.டி.ஆர்!

திமுக ஆட்சியையே ஆட்டம் காண வைத்த 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தை வெளிக்கொண்டுவந்த முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் தற்போது கப்சுப் என்று ஆகிவிட்டார்.. ஏற்கனவே, மதுரையில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை பிடிஆர்.. காரணம் கேட்டால், ஏற்கனவே நான் முதல்வரிடம் கேட்டு லீவ் வாங்கிவிட்டேன் என்று ஸ்கூல் குழந்தைபோல சொல்லிவிட்டு, சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார் பிடிஆர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் முதல்வரின் நிகழ்ச்சிகளைவிட, அப்படியென்ன சிங்கப்பூரில் அவருக்கு முக்கிய வேலை இருந்திருக்கும்? என்று தங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டனர் திமுகவின் உடன்பிறப்புகள்…

இவர் இப்படி என்றால், சீனியர் அமைச்சர்கள் சிலரோ, எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாமல் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.. அவர்களின் துறை சார்ந்த அதிகாரிகள்கூட அமைச்சர்களை பார்க்க முடிவதில்லை என்று புலம்புகின்றனர்.. சமீபத்தில் கூட , கோவையின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர், திருச்சிக்கு சென்றால் கூட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பார்க்க முடியாது, அவர் எங்கிருக்கிறார் என்று கூட யாருக்கும் தெரியாது என்று புலம்பித்தள்ளிய வீடியோ வைரலானது..

எங்கு பார்த்தாலும், அரசு விழாக்களில், கட்சி நிகழ்ச்சிகளில், உதயநிதி மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.. உதயநிதியின் விளையாட்டுத் துறை விழாவில் அவர் மகன் இன்பநிதிகூட இடம் பெறுகிறார். ஆனால், மற்ற எந்த அமைச்சர்களையும் வெளியே முகம் காட்டாதபடி கவனமாகப் பார்த்துக்கொள்கிறது விடியா அரசு…. அவ்வளவு ஏன்? சமீபத்தில் நடந்த நீட் உண்ணவிரத நாடகத்தில் கூட, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுவையே ஓரங்கட்டிவிட்டு, உதயநிதி தான் முன்னிலைப்படுத்தப்பட்டார்…

இந்த இடத்தில் 2 விஷயங்கள் சந்தேகங்களாக எழுகின்றன.. ஒன்று, திமுக ஆட்சியில் நடக்கும் உண்மைகளைச் சொன்னால், ஓரங்கட்டப்படுவார்களா அமைச்சர்கள்? மேலும், உதயநிதியை மட்டுமே முன்னிருத்தவேண்டும் என்பதற்காக மற்ற அமைச்சர்கள் யாரும் வேளியே தெரியக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறதா? என்றும் சந்தேகம் எழுகிறது…

ஆக, 30 ஆயிரம் கோடி ஊழல் ஆடியோ வைரலான பிறகு பிடிஆருக்கு நடந்தது என்ன? தன் சொந்த மாவட்டத்திற்குள் நுழையக்கூட முடியாமல் பிடிஆர் சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? திமுக அமைச்சரவையில் இவர்களெல்லாம் அமைச்சர்களா என்று ஆச்சர்யத்துடன் கேட்குமளவுக்கு யாருமே வெளியே தெரியாதது ஏன்? தன் வாரிசைத் தவிர யாருமே பெயர் வாங்கிவிடக்கூடாது என்று நினைக்கிறதா திமுக?இல்லை, வெளியே எட்டிப்பார்த்தால் எங்கே அமலாக்கத்துறை ரெய்டு வந்துவிடுமோ என்று பயந்துவிட்டார்களா அமைச்சர்கள்? என்று கேலியாக மக்கள் பேசுவதைக் கேட்கும்போது, ஒருவேளை இப்படியும் இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

Exit mobile version