இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! திமுக மீது செம கடுப்பில் இருக்கும் கூட்டணி கட்சிகள்!

சமூக நீதி, திராவிட மாடல் என்றெல்லாம் பேசிப் பேசி வெறும் வாயில் வடைசுடும் விடியா ஆட்சிக்கு அந்த வார்த்தைகளே தற்போது ரிவீட் அடித்திருக்கிறது.. இன்று அதே சமூகநீதியின் பெயராலேயே திமுகவின் கூடு கலைகிறது… பட்டியலின மக்களுக்காக அதைச் செய்தோம் இதைச்செய்தோம் என்று அளந்துவிட்ட திமுகவின் அமைச்சர்கள் , அந்த பட்டியலின மக்களை எப்படி நடத்தினார்கள் என்று இந்த நாடறியும்…

பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலையோடு இருக்கும் திமுக அமைச்சர்கள் திருமாவளவனை நடத்திய விதம் கண்டு கொதித்துப்போய் இருந்தாலும், இதுவரை அமைதிகாத்து வந்த விசிக தற்போதுதான் திமுகவின் உண்மை முகத்தை கண்டடைந்திருக்கிறது…. இனியும் நாங்கள் அடிமையாக இருக்க மாட்டோம் என்றெல்லம் வீராவேசமாக பேசியிருக்கிறது.. இதைக்கண்டு திமுகவே கொஞ்சம் வெலவெலத்துத்தான் போயிருக்கிறது…

தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடியில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 30-40 பட்டியலின மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும், குழந்தைகளைக்கூட இந்த சாதிவெறி எண்ணங்கள் விட்டுவைக்கவில்லை, சமீபத்தில் நடந்த நாங்குநேரி சம்பவமும்தான் அதற்கு அத்தாட்சி என்று வார்த்தைகளால் வாள் வீசியிருக்கிறார் திருமாவளவன்.. காவல்துறையில் உளவுத்துறை இருப்பதைப்போல, சாதியப் பிரச்சனைகளைக் களையவும் ஓர் தனி உளவுப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கையையும் சேர்த்தே வைத்திருக்கிறார்…

இதுஒருபுறம் என்றால், சென்னை மாநகாராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்… மாநகராட்சியின் மெத்தனப்போக்கை கண்டித்தும், அதனால் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும் கொடிபிடித்து கோஷமிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் விடியா திமுக அரசின் இந்த ஆணவச் செயலைக் கொஞ்சம் கடுமையாகவே சாடியிருக்கின்றனர்…

ஏற்கனவே, வேங்கைவயல் சம்பவத்திலேயே பட்டியலின மக்களின் கோபக்கனல்களை சம்பாதித்து வைத்திருக்கும் திமுகவிடம் போதும்யா உங்க நாடகம், ஓட்டுனது ரீல் அந்துபோச்சு என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்கள் அதன் கூட்டணி கட்சிகள்..

வாரிசுக்காக சீனியர்களை அவமதித்தது, செந்தில்பாலாஜியை தூக்கிவைத்து கொண்டாடியது என்பன போன்ற காரணங்களால், சொந்தக்கட்சிக்காரர்களிடமே கெட்டபேரை வாங்கிய ஸ்டாலின், தற்போது போலி சமூகநீதியால் கூட்டணி கட்சியினரிடமும் எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்….

சாதியின் பெயரைச்சொல்லி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்துவரும் ஸ்டாலினின் எண்ணத்தில் குண்டைத்தூக்கிப்போட்டுவிட்டதா கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு? இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கும் இந்த சமயத்தில், கூட்டணி கட்சியினரின் எதிர்ப்பை எப்படி சமாளிக்கப்போகிறார் ஸ்டாலின்? ஒருபோதும் கூட்டணியில்லாமல் ஜெயிக்க முடியாத திமுக என்ற கப்பலை எப்படி கரை சேர்க்கப்போகிறார் ஸ்டாலின்? விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகும்பட்சத்தில் திமுகவின் கூட்டணி கப்பல் மூழ்கத்தான் போகிறது என்று இப்போதே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Exit mobile version