இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! முதல்வர் நடத்தியது பள்ளிக்குழந்தைகளுக்கு பாராட்டு விழாவா? அன்பில் மகேஸிற்கு பாராட்டு விழாவா?

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் சிதலமடைந்து காணப்படுவதால் மாணவர்கள்,ஆசிரியர்கள் அச்சம்….

திருவள்ளூர் நகராட்சி வடக்கு ராஜவீதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் பாழடைந்து பள்ளி நடத்ததகுதியில்லை என நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர் அருகே, அடிப்படை வசதிகள் இல்லாமல், மரத்தடி நிழலில் கல்வி பயின்று வரும், அரசு பள்ளி மாணவ, மாணவிகள்..

இதெல்லாம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்து வெளியான ஒரு சில செய்திகள்..

பள்ளிக்கட்டிடங்களின் நிலை இப்படி என்றால், அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டிருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாய் அமைந்துள்ளது. இதுவே இப்படி என்றால் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு டேப் எனப்படும் கைக்கணினி வழங்குவதாக தேர்தலில் அறிவித்தது எல்லாம் நடக்கவே போவதில்லை என்பது இப்போதே உறுதியாகி விட்டது.

இலவச சைக்கிள் கொடுக்கிறேன் என்பதாக அரசு நடத்தும் நிகழ்வில் திமுகவின் செய்யும் அரசியல் அக்கப்போர்களும் வெளியாகி நகைப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இப்படி பள்ளிக்கல்வித்துறையின் வேதனைகள் வெளியாகிக் கொண்டிருக்க, துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சாதனை செய்து விட்டதாகவும், பள்ளிக்கல்வித்துறையை மாநிலத்திலேயே முதன்மையாக மாற்றிக் காட்டிவிட்டதாகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ஸ்டாலின்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அமைச்சரையும் ஸ்டாலின் புகழ்ந்து தள்ளியிருப்பது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே அதிருப்தியைத்தான் ஏற்படுத்தி உள்ளது.

உண்மையில் பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே மக்களிடமும், மாணவர்களிடமும் இருந்து கிடைக்கும் பதிலாக இருக்கிறது.

அப்படி இருக்க, மேடைக்கு மேடை தன் வாரிசு அமைச்சரான உதயநிதியையும், அவரது நண்பரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷையும் பாரட்டத்தான் முதல்வர் ஸ்டாலின் விழா நடத்துகிறாரா?

முதல்வர் சொல்வது போல பள்ளிக்கல்வித்துறை உண்மையிலேயே வளர்ந்துவிட்டதா என்றால் இல்லை என்பதே கல்வியாளர்களின்கருத்தாக உள்ளது. வெறும் விழாக்கள் நடத்துவதை உருப்படியான திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்பதும் அரசுக்கு அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

Exit mobile version