இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.. சட்டப்பேரவையில் ஜனநாயகத்தின் குரலை நசுக்கப் பார்க்கிறதா விடியா திமுக?

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேசுவதால், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேசும்போது நேரலையை துண்டித்து ஜனநாயகத்தின் குரலை திமுக அரசு நசுக்கப்பார்ப்பது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

ஜனநாயகத்தை காக்கவும், மக்களின் பிரச்சனைகள் குறித்தும் பேசுவதற்குத்தான் மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாகவும் அவர்கள் நாள்தோறும் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் பேரவையில் பதிவு செய்ய முயலும் எதிர்க்கட்சியான அதிமுகவை தடுப்பதிலேயே குறியாக இருக்கிறது ஆளும் திமுக அரசு.

பொதுமக்கள் காலை எழுந்ததும் காபி குடிக்க பால் பாக்கெட் வாங்கச் சென்றால் ஆவின் பால் விலையேற்றத்துடன் புத்தம் புது விடியலை கொடுத்து அதிர்ச்சி கொடுக்கிறது திமுக அரசு….சரி பால் விலைதான் ஏறியது என்று மனதை தேற்றியபடி வீடு திரும்பியவுடன் ஃபேன் போட்டு உட்கார்ந்தால் மின் கட்டணத்தை பகீர் என பரிசாக கொடுத்து விடுகிறது ஆளும் விடியா திமுக அரசு….

பால் விலை, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண கொள்ளை, என திமுக அரசு விலை ஏற்றாத டிபார்ட்மெண்ட் இல்லை. இப்படி எந்த ஒரு துறையை எடுத்தாலும் அதில் மக்களுக்கான நன்மைகளை கொடுக்காமல் பாதிக்கும் வகையிலேயே திமுக அரசு செயல்படுகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை திமுக அரசு முடிக்க உள்ள நிலையில், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்தும் அரசின் இயலாமையை எடுத்துரைக்கும் வகையிலும் எதிர்க்கட்சியான அதிமுக
செயல்பட்டு வருகிறது.

தற்போது நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் தொடர்பாகவும், மானியக்கோரிக்கைகள் தொடர்பாகவும் தினந்தோறும் விவாதங்கள் பேரவையில் நிகழ்ந்து வருகின்றன.

அப்படி விவாதங்களின்போதும் சீரோ ஹவரில் பேசும் போதும் செயல்படாத திமுக அரசையும் அதன் அமைச்சர்களையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், மக்களின் பிரச்சனைகளை எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது தொடர்ந்து நேரலை செய்வதை நிறுத்துவதிலேயே மும்முரமாய் செயல்படுகிறது திமுக அரசு…

இதுமட்டுமில்லாமல், எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் பேச 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தை ஒதுக்கி அப்படி பேசும்போது அவர்களை குறுக்கிட்டு நேரத்தை வீணாக்குவதிலேயே முனைப்பு காட்டுகிறார் பேரவைத் தலைவர்.

இப்படி எதிர்க்கட்சியின் குரலை நிறுத்துவதன் மூலமாக மக்கள் பிரச்சனைகளை வெளியே தெரியாமல் இருக்க முயற்சி செய்கிறதா திமுக அரசு?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதை நேரலை செய்யுமா?

மக்களின் பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக தீர்க்க இனியாவது விடியா திமுக அரசு முன்னெடுப்புகளை செய்யுமா? அப்படி செய்ய வேண்டுமானால் எதிர்க்கட்சிக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version