ஒவ்வொரு இந்திய குடிமகனையும் உயர்த்துவதே புதிய அரசின் நோக்கம்: மோடி

ஒவ்வொரு இந்திய குடிமகனையும் உயர்த்துவதே புதிய அரசின் நோக்கமாக இருக்கும் என மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித்தலைவர்கள் மற்றும் புதிய எம்.பிக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். புதிய எம்.பிக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், இந்தியாவின் கலாசாரம் பண்பாடு மட்டுமே இந்தியாவின் பலமாக இருப்பதாக தெரிவித்தார்.

சேவையால் மட்டுமே இந்திய மக்களுடைய அன்பையும் ஆதரவையும் பெறமுடியும் என குறிப்பிட்ட மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் எனவும் உறுதியளித்தார்.

கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சி மீது மக்களுக்கு மனநிறைவு ஏற்பட்டதால்தான், மக்கள் மீண்டும் தங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு இந்திய குடிமகனையும் உயர்த்துவதே இந்த அரசின் குறிக்கோளாக இருக்கும் என்று தெரிவித்த அவர், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையையும் பெறுவதற்கும் புதிய அரசு பாடுபடும் என்றார்.

Exit mobile version