திட்டமிட்டபடி நீட் தேர்வு; காற்றில் பறந்த திமுக வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் நீட் தேர்வு என்பதே இருக்காது என்ற தேர்தல் வாக்குறுதி காற்றில் பறந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்வு, மாணவர்கள் மற்றும் பெற்றோரை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிராக பொங்கி எழுந்த திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று கூறியது அனைவரும் அறிந்ததே. கடந்த சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நீட் விவகாரத்தை பூதாகரமாக்கி அரசியல் செய்தது திமுக. உச்சக்கட்டமாக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால் விடியா அரசு ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைவிட நீட் தேர்வு குறித்து திமுக ஏற்படுத்திய குழப்பம் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை மனஉளைச்சலுக்கு தள்ளியது. திமுக அறிவித்தபடி இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஒருசில மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல் இருந்தனர். ஆட்சிக்கு வந்த பிறகும் நீட் தேர்வு இல்லை என்றே கூறி வந்த திமுக அரசு, தேர்வுக்கான தேதி அறிவித்த பிறகு தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியது, மருத்துவ கனவுடன் காத்திருந்த மாணவர்கள் தலையில் பேரிடியாய் இறங்கியது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மாணவர்களை தயாராக சொன்னதால், குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராவது எப்படி என்று தவித்துப் போனார்கள். இந்த நிலையில் தான் நாளை தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு சரியாக தயாராகாததால், இந்த தேர்ச்சி விகிதம் குறையுமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி நீட் தேர்வை ரத்து செய்யாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோரை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கும் திமுக அரசு, நீட் தேர்வை எப்படி ரத்து செய்யப்போகிறது என்ற ரகசியத்தை இன்னும் வெளியிடவில்லை… 

Exit mobile version