தே.ஜ.கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில், பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி பெயரை பா.ஜ.க. தலைவர் அமித் ஷா முன்மொழிந்தார். இதனை ராஜ்நாத் சிங், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனையடுத்து புதிய பிரதமராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, பிரதமராக தேர்வான மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Exit mobile version