நாங்குநேரி விபத்தில் உயிரிழந்த புதியதலைமுறை ஒளிப்பதிவாளருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

சந்திரயான் – 3 வெற்றி குறித்து விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் பேட்டி எடுக்கச் சென்ற செய்தியாளர் குழு விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவரின் டிவிட்டர் பதிவு பின்வருமாறு உள்ளது.

சந்திரன்-3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை திருவனந்தபுரத்தில் பேட்டி எடுத்து திரும்பிய நெல்லை செய்தியாளர் குழு சென்ற வாகனம் நாங்குநேரி நான்குவழி சாலையில் விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் புதிய தலைமுறை செய்தியாளர் திரு.நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஒளிப்பதிவாளர்கள் திரு.வள்ளிநாயகம், மற்றும் திரு.நாராயணன் ஆகியோர் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் போற்றத்தக்க பத்திரிக்கையாளர் பணியின் போது விபத்தில் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் இந்த அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

Exit mobile version