தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்

குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று, மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இது தற்போது இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய குமரிக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காணப்படுகிறது. இதன் காரணமாக, மத்திய மேற்கு, அதையொட்டிய அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்றும், எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version