மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,000 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 22 ஆயிரத்து 500 கனஅடியிலிருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளதால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 22 ஆயிரத்து 500 கன அடியிலிருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடியிலிருந்து 400 கனஅடியாக குறைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர் வரத்து 22 ஆயிரம் கன அடியிலிருந்து 17 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு ஆர்ப்பரித்து வரும் உபரி நீரால் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 85-வது நாளாக அருவியில் குளிக்கவும், 15-வது நாளாக பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு சண்முகாநதி அணை அதனுடைய முழு கொள்ளளவான 52.5 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அப்படியே திறந்து விடப்படுகிறது.

Exit mobile version