மேகதாது அணைக் கட்டும் விவகாரம்! எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமாருக்கும், இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக அரசுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளது என்றும் அதற்கு, தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய விடியா திமுக அரசின் நீர்வளத் துறை அமைச்சர், கொஞ்சல், கெஞ்சல் மற்றும் தாஜா செய்து கண்துடைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரசும், திமுகவும் இணைந்து இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் மடிவதற்கு காரணமாக இருந்ததுபோல், இங்குள்ள காவேரி படுகை விவசாயிகளையும், காவேரி நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட மக்களையும் இந்த விடியா திமுக அரசு வஞ்சிக்கப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர், ஏற்கெனவே இந்த ஆட்சியாளர்கள் கையாலாகாதவர்கள் என்பதை உணர்ந்து கொண்ட அண்டை மாநிலங்கள், தமிழகத்தை பாலைவனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன எனவும், இந்த விடியா திமுக ஆட்சியாளர்களின் உறுதுணையோடு நமது கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறது என்றும் நாள்தோறும் செய்திகள் வெளிவருகின்றன என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் அனைத்து தடைகளையும் தகர்த்து மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பொங்குவதன் ரகசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக ஆட்சியாளர்களுக்கு கர்நாடகாவில் பல்வேறு தொழில்கள் உள்ளதால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருந்தாலும், அது காவேரி பிரச்சினை என்றாலும், மேகதாது பிரச்சினை என்றாலும் அதிமுக கடுமையாக எதிர்த்தது எனவும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கையாலும், தொடர் சட்டப் போராட்டத்தினாலும் 2007 ஆம் ஆண்டு காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணை வெளியிட்டது எனவும் குறிப்பிட்டுள்ள அவர், தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு மத்திய அரசிதழில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது தலைமையிலான அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 2018 ஆம் ஆண்டு பில்லிகுண்டுலுவில் 177.25 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தையும் அவர் சுட்டிக்காடியுள்ளார். அதனைத் தொடர்ந்து, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டது எனவும், கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, தனது தலைமையிலான அரசு, சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தியும் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது என அவர் கூறியுள்ளார். தான் முதலமைச்சராக இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பிரதமரை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ் நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் ஆயிரத்து 956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அவர், காவேரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்துள்ளா எதிர்க்கட்சி தலைவர், மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அதிமுக அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version