தொடர்ந்து 3-வது நாளாக நீடித்த மம்தா போராட்டம் வாபஸ்

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை, கைது செய்யாமல் விசாரிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, தனது தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி முடித்துக்கொண்டார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த, சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றனர். அப்போது, அவர்களை தடுத்த காவல்துறையினர், அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர். இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கையை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக, மூன்று நாட்களாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டம் நடத்தி வந்தார்.

விசாரணைக்கு காவல் ஆணையர் ஒத்துழைக்காததை அடுத்து, சிபிஐ உச்சநீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, ராஜீவ் குமார், விசாரணைக்கு, சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், அவரை கைது செய்யாமல், விசாரணை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், கொல்கத்தா மெட்ரோ ரயில் வளாகத்தில் நடைபெற்றுவரும் தர்ணா போராட்டத்தில், ராஜீவ் குமாரும் பங்கேற்றார். அவரின் இந்த செயல், இந்திய காவல்துறை விதிகளுக்கு எதிரானது என்று கூறி, ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, காவல் ஆணையருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில், காவல் ஆணையரை கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு முன்னிலையில், தனது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். மேலும், தன்னுடைய போராட்டத்திற்கு ஆதரவளித்த பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Exit mobile version