ஜோதி வடிவில் காட்சி அளித்த சபரிமலை ஐயப்ப சுவாமி

சபரிமலை பொன்னம்பல மேட்டில், மகரஜோதி வடிவில் காட்சி அளித்த ஐயப்பனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு வருடமும் தை மாத முதல் நாளில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன் படி, இந்த ஆண்டிற்கான மகரஜோதி நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷமிட்டு ஐயப்பனை வழிபட்டனர். சபரிமலையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னம்பல மேட்டில், ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவார் என்பது ஐதீகம்.

முன்னதாக, சபரிமலை கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு, பந்தள ராஜா அரண்மனை ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. ஆபரணங்களை அணிவித்த பின் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து சரியாக நேற்று மாலை 6:50 மணிக்கு  பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி அளித்தார். ஜோதியை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்தில் சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷமிட்டு தரிசித்தனர்.

Exit mobile version