காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லும்

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன், 48 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்று 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் போட்டியிட்ட தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் அதிகாரி விஜயராகவன், வாக்குகள் நிகாரிக்கப்பட்டது குறித்து விளக்கினார். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவனின் வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி கார்த்திகேயன், அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றி செல்லும் என தீர்ப்பளித்ததுடன், திருமாவளவனின் குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரது மனுவையும் தள்ளுபடி செய்தார்.

Exit mobile version