டிடிவி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

அரசியல் செய்வதற்காக மாநிலத்துக்கு வரும் நல்ல திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன் என்று டி.டி.வி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே, ஜூலை 7 ஆம் தேதி டி.டி.வி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரியாஸ், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் என்பதாலும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியுள்ளதாலும் போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, மாநிலத்துக்கு வரும் நல்ல திட்டங்களை பொத்தாம் பொதுவாக எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது ஏற்புடையதல்ல என மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Exit mobile version