இயக்குநர் ஷங்கருக்குத் தடையா? வழக்குக்கு அனுமதி அளித்த நீதிமன்றம்

இந்தியன்-2 படத்தை முடிக்காமல் பிற படங்களை இயக்க தடை விதிக்க கோரும், மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய லைகா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் சங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் சங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதில் இயக்குநர் சங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், 14 கோடி ரூபாய் ஏற்கனவே கொடுத்திருப்பதாகவும் மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த தயாராக உள்ளதாகவும் உத்தரவாதம் அளித்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு மீது பதிலளிக்க கோரி இயக்குநர் சங்கருக்கு உத்தரவிட்டதுடன், இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க லைகா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தது.

Exit mobile version